வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (14:14 IST)

பொங்கல் பரிசு வழங்க தடை! – அதிர்ச்சிக்குள்ளான மக்கள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பொங்கல் பை வழங்க தடை விதித்திருப்பது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தமிழகத்தில் ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது முடிவடைந்துள்ள நிலையில் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

தமிழக அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஜனவரி மாதம் வரும் பொங்கல் விழாவிற்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் செய்ய தேவையான அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி போன்ற பொருட்கள் அடங்கிய பொங்கல் பையும், ரொக்க பணமும் வழங்குவது வழக்கம். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பை மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது பொங்கல் பை மற்றும் ரொக்கம் வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த தடை உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், மற்ற மாவட்டங்களில் பொங்கல் பை வழங்க தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் முன்கூட்டியே பொங்கல் பை மற்றும் ரொக்கம் வாங்கலாம் என்பதால் ஆர்வமாய் இருந்த மக்கள் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.