வாரம் ஒருமுறை நகராட்சிக்கு பயணம் - பவானிசாகர் எம்.எல்.ஏ. சுந்தரம் அறிவிப்பு
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
செவ்வாய், 12 ஜூலை 2011( 10:47 IST )
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை சத்தியமங்கலம் நகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளிலும் வியாழக்கிழமை புன்செய்புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளிலும் நேரடியாக நகர்வலம் செல்லப்போவதாக பவானிசாகர் எம்.எல்.ஏ. சுந்தரம் தெரிவித்தார்.
இது குறித்து பவானிசாகர் எம்.எல்.ஏ., சுந்தரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது பொதுமக்கள் நேரடியாக என்னை சந்திக்க பல்வேறு பகுதிகளில் அலுவலகம் திறக்கபட்டுள்ளேன். புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகர் ஆகிய மூன்று இடங்களில் தற்போது அலுவலகம் உள்ளது. மேலும் தாளவாடி, தலமலை, ஆசனுõர் மற்றும் கடம்பூர் பகுதியிலும் அலுவலகம் திறக்க தயாராகி வருகிறது.
பொதுமக்கள் தங்கள் குறைகளை நேரடியாக என்னிடமோ அல்லது என் அலுவலகத்திலோ கொடுக்கலாம். ஒவ்வொறு வாரம் செவ்வாய்கிழமை சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும், வியாழக்கிழமை புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் நகர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளேன்.
அதிகாரிகள் முனைப்புடன் செயல்படவேண்டும். சத்தியமங்கலம் நகராட்சி பகுதிக்குட்பட்ட குள்ளங்கரடு, பெரியகுளம், காசிகாடு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி தண்ணீர் கொடுக்கவில்லை. ஆனால் இப்பகுதியில் விவசாயிகள் தனியாக பவானி ஆற்றில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளனர். அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தால்கூட தாங்கள் கொண்டு சென்ற லைனில் குடிநீர் குழாய் இணைத்திருப்பார்கள். ஆனால் அதிகாரிகள் எந்த முயற்சியும் செய்யவில்லை. இவர்களுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இதேபோல் புதன்கிழமை தாளவாடி மலைப்பகுதிகளிலும், வியாழக்கிழமை கடம்பூர் மலைப்பகுதிகளிலும் நேரடியாக சென்று மக்கள் பிரச்சனைகளை தீர்க்க ஏற்பாடு செய்துள்ளதாக கூறினார். பேட்டியின்போது எம்.எல்.ஏ., வின் நேர்முக உதவியாளர் மோகன்குமார், சத்தியமங்கலம் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஸ்டாலின்சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.