வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2019 (13:12 IST)

அபிநந்தன் விடுதலை – டிவிட்டரில் ஹெச் ராஜா, சுப. வீரபாண்டியன் மோதல் !

பாகிஸ்தான் கையில் சிக்கிய இந்திய விமானி அபிநந்தன் விடுதலை தொடர்பாக ஹெச் ராஜாவும் சுப வீரபாண்டியன் ஆகியோர் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா பாகிஸ்தானுக்கிடையிலான அடுத்தடுத்த தாக்குதல் நடத்தி வந்த சூழலில் இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியது இரு நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையில் அமைதிப் பேச்சுவார்த்தையை ஊக்குவிக்கும் விதமாக அபிநந்தன் இன்று விடுதலை செய்யப்படுவார் என அறிவிக்கப்ப்ட்டது.

இதனையடுத்து பாகிஸ்தான் இத்தகைய நடவடிக்கை பாகிஸ்தான் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் வரவேற்பைப் பெற்றது. ஆனாலும் ஒரு சிலர் மத்திய அரசு கொடுத்த அழுத்தம் மூலமே பாகிஸ்தான் அரசு பணிந்துள்ளது எனக் கூறினர். இந்த இருத் தரப்பிற்கும் இடையே சமூக வலைதளங்களில் மோதல் போக்கு உருவானது.

இது சம்மந்தமாக திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர், சுப.வீரபாண்டியன் தனது ட்விட்டரில், "அபிநந்தன் விடுதலை செய்யப்படுவார்  என்ற இம்ரான்கானின் அறிவிப்பால் இந்தியாவே மகிழ்கிறது. சில தேசபக்தாளின் முகம் மட்டும் சுருங்கிக் கிடக்கிறதே, ஏன்?" எனப் பதிவிட்டிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் விதமாக பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ‘பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய அரசின் கடுமையான நடவடிக்கையும் ராஜிய உறவின் மூலம் நாம் கொடுத்த சர்வதேச அழுத்தத்தின் வெற்றியே அபிநந்தன் விடுதலை. எனவே கால்டுவெல் புத்திரர்கள் தான் கலங்கிப் போயுள்ளனர். ஆனால் புல்வாமா தாக்குதலில் முழு பட்டியலைப் பார்க்காமல் சாதியப் பதிவிட்டவர் தானே இவர்’ என சுப வீரபாண்டியனுக்குப் பதில் அளித்துள்ளார்.

இதனால் நெட்டிசன்கள் இருதரப்பாகப் பிரிந்து சுப வீ க்கும் ஆதரவாகவும் மற்றொருப் பிரிவினர் ராஜாவுக்கு ஆதரவாகவும் கருத்துக் கூறி வருகின்றனர்.