வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 29 நவம்பர் 2014 (17:42 IST)

திருச்சி மாநாடு முதல் வெற்றி: ஜி.கே.வாசன் உற்சாகம்

திருச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநாடு தனது முதல் வெற்றி என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகரில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடக்க விழா மற்றும் கொள்கை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
கடந்த 3 ஆம் தேதி அன்று மூத்த முன்னணி தலைவர்கள் முன்னிலையில் முக்கிய பிரதிநிதிகள் கூட்டத்தில், புதிய இயக்கம் ஆரம்பிக்க போகிறோம் என்ற முடிவை அறிவித்ததை நினைவுகூற விரும்புகிறேன். அதன் தொடர்ச்சியாக இயக்கத்தின் அனைத்து தரப்பு மக்களும், பல்வேறு அமைப்புகளும், என்னை நேரடியாக சந்தித்தும், தொலைபேசி மூலமாகவும், ஆதரவும் அரவணைப்பும், உற்சாகமும் கொடுத்தது எங்களுக்கு மிகுந்த தைரியத்தைக்  கொடுத்தது.
 
நாங்கள் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து இயக்க நண்பர்களுடன் கலந்து பேசும்போது அவர்கள் ஏற்கெனவே கிராம, வட்டார, நகர, அளவில் களப்பணியில் இறங்கி ஆதரவு திரட்டியதை எங்களுக்காக தெரிவித்தபோது அது மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்தது.
 
‘‘போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். எம்  கடன் பணி செய்து கிடப்பதே’’ என்ற கொள்கையை க் கடை பிடிக்கும் வண்ணம் நம்முடைய தலைவர்களும், தொண்டர்களும், மிகுந்த சகிப்புத்தன்மையோடும், புதிய கலாச்சாரத்தோடும், கட்டுப்பாட்டோடும், பணி ஆற்றியது என் நெஞ்சில் இன்றும் பசுமையாக இருக்கின்றது.
 
பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திடவும், மக்கள் தலைவர் மூப்பனாரின் தாரக மந்திரமான வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமைக்க வேண்டும் என்ற தாக்கம் தமிழகத்தில் உள்ள அனைவர் மத்தியிலும் எழுந்ததை எங்களால் உணர முடிந்தது. அதனால்தான் நாம் எதிர்பார்த்ததிற்கு மேலாக நம்முடைய புதிய பயணத்தில் முதல் வெற்றியை திருச்சியில் நம்மால் காண முடிந்தது.
 
விழா கோலம் பூண்ட திருச்சி மாநகரத்தில், அலை அலையாக மக்களும், தொண்டர்களும் கலந்து கொண்டு நமக்கு மிகப்பெரிய வெற்றியைத்  தேடித்தந்தனர்.
 
இந்த வெற்றிக்கு அடித்தளம் அமைத்த திருச்சி மாவட்ட மூத்த முன்னணி தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், விழா குழுவினருக்கும் மற்றும் தமிழகம் முழுவதிலிருந்து இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான மாவட்ட, வட்டார, நகர, கிராம, நண்பர்களுக்கும், மூத்த முன்னணி தலைவர்களுக்கும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், முன்னாள் மாவட்ட தலைவர்களுக்கும், பஞ்சாயத்து அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் மற்றும் அனைத்து அமைப்பை சார்ந்த நண்பர்களுக்கும், பொது மக்களுக்கும், எங்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்து கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து இயக்கத்தின் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.