வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2016 (09:38 IST)

சசிகலா புஷ்பா கைது?: விரைவில் நடக்கலாம்!

சசிகலா புஷ்பா கைது?: விரைவில் நடக்கலாம்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா முன்ஜாமீன் வக்காலத்தில் கையெழுத்து மோசடி செய்த வழக்கில் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வருகின்றன.


 
 
கடந்த 2011-ஆம் ஆண்டில் அவரது வீட்டில் வேலை செய்த இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்காக சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர், மகன் மீது புகார் அளிக்கப்பட்டது.
 
இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த போது, சசிகலா புஷ்பா தனது கணவருடன் சிங்கப்பூர் சென்றிருந்தபோது முன்ஜாமீன் வக்காலத்தில் எப்படி கையெழுத்திட்டார் என அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
 
இதனையடுத்து சசிகலா புஷ்பா உள்ளிட்டோரின் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி வக்காலத்தில் மோசடியாக கையெழுத்திட்டது குறித்து போலீசார் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
 
இதனையடுத்து கோ.புதூர் போலீசார் சசிகலாபுஷ்பா, அவரது கணவர், மகன் மீது நீதிமன்றத்தை ஏமாற்றும் வகையில் ஆவணங்கள் தாக்கல் செய்தல், கையெழுத்தை மோசடியாக போட்டு போலி ஆவணங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உயர் நீதிமன்ற கிளை உத்தரவின்பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் சசிகலா புஷ்பா கைது விரைவில் நடக்கலாம் என கூறப்படுகிறது.