வியாழன், 28 மார்ச் 2024
  1. ப‌ல்சுவை
  2. யோகா
  3. ஆசன‌ங்க‌ள்
Written By Sasikala

ப்ராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி

ப்ராணயாமம் என்னும் மூச்சுப் பயிற்சி

உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை இந்த சுவாசம் நமது உடலின் ஊடே ஓடிக்கொண்டிருக்கிறது. 


 
 
இன்னமும் தீர்க்கமாய் சொல்வதானால் இந்த சுவாசம்தான் வாழ்க்கை. இந்த உண்மையை நாம் அறிந்திருக்கும் அளவுக்கு அதை உணரவில்லை என்பதே உண்மை.
 
நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும். சுவாசத்தை சரியாக செய்யாதபோது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.
 
பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது. ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும்போது புத்துணர்ச்சி கிடைக்கும்.
 
இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும். முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.
 
மூச்சுப்பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்.
 
மூச்சுப் பயிற்சி
 
எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது. இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். 
 
ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.
 
பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே. சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிழுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.
 
அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும். இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும். 
 
இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது. நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். 
 
குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.
 
இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம். காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன. இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.
 
மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது. இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.