வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (23:14 IST)

மார்ச் மாத ராசிப் பலன்கள் - துலாம்

விறுவிறுப்பையும், உண்மையையும் நேசிப்பவர்களே! உங்களுடைய ராசிக்கு சப்தமாதிபதி செவ்வாய் 7-ம் வீட்டிலேயே வலுவாக அமர்வதால் உங்களுடைய ஆளுமை திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த பனிபோர் நீங்கும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். அவருக்கு வேலை கிடைக்கும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். திருமணம் தள்ளிப் போனவர்களுக்குக் கூடி வரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ஆனால் 5-ந் தேதி முதல் புதன் 6-ல் மறைவதாலும், இந்த மாதம் முழுக்க உங்களுடைய ராசிநாதன் சுக்ரனும் 6-ல் மறைந்துக் கிடப்பதாலும் தொண்டை வலி, சளித் தொந்தரவு, கண் வலி, பார்வைக் கோளாறு வந்து நீங்கும். விதிகளை மீறி வேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். அவ்வப்போது அபராதத் தொகை கட்ட வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது வாக்குவாதம் வந்துச் செல்லும். வீட்டில் கழிவுநீர் குழாய், குடிநீர் குழாய் பழுதாகும்.

கேது 5-ல் நிற்பதால் பிள்ளைகளிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்து விஷயத்தில் அதிகம் மூக்கை நுழைக்காதீர்கள். 9-ம் தேதி வரை ஜென்ம குரு நடைபெறுவதால் ஆரோக்ய குறைவு வந்துச் செல்லும். சின்ன சின்ன உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும்.

ஆனால் 10-ந் தேதி முதல் குரு வக்ரமாகி 12-ல் மறைவதால் அனைத்துப் பிரச்னைகளையும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு.

கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களை கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். திருமணம் கூடி வரும். வியாபாரம் தழைக்கும். பழைய பாக்கிகளை இங்கிதமாகப் பேசி வசூலிப்பீர்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்யோகத்தில் கால, நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டி வரும்.

சக ஊழியர்கள் மத்தியில் உங்களை பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். கலைத்துறையினரே! உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். முன்கோபத்தையும், அலட்சியப் போக்கையும் தவிர்த்து, விவேமாக செயல்பட வேண்டிய மாதமிது.