சசிகலா முதல்வராவதை தடுக்க கையெழுத்து இயக்கம் : இதுவரை 30 ஆயிரம் பேர் பதிவு
அதிமுக பொதுச்செயலாலளர் சசிகலா முதல்வராக நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், அவரே முதல்வராக வேண்டும் என தற்போதைய தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். மேலும், தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். வருகிற 9ம் தேதி தமிழகத்தின் முதல்வராக சசிகலா பதவியேற்பார் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், சசிகலா முதல்வராவதை தடுக்க வேண்டும் என ஜானாதிபதிக்கு கோரிக்கை வைக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் அரசன் என்பவர் சேஞ்ச் டாட் ஓர்ஜி (change. org) என்ற பிரபல கையெழுத்து இயக்க வெப்சைட் மூலம் அவர் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.
ஏராளமான வழக்குகளில் சிக்கியுள்ள சசிகலா, மாநிலத்தின் முதல்வராகக் கூடாது என்பதே அவரின் கோரிக்கையாகும். இந்த இணையதளத்தில் இதுவரை 30 ஆயிரம் பேர் சசிகலாவிற்கு எதிராக பதிவு செய்துள்ளனர்.