வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 25 ஜனவரி 2017 (15:41 IST)

ஜெயலலிதா தீபா பேரவையில் சேர ரூ. 500 : நிர்வாகிகள் கண்டனம்

சேலத்தில் ஜெயலலிதா தீபா பேரவையில் சேர்வதற்கு ரூ. 500 விண்ணப்பம் வழங்கப்படுவதாக வெளியான தகவல்கள் பொய்யானது என்று நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


 

கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக் கொண்டார்.

இதற்கிடையில், சசிகலா தலைமைப் பதவிக்கு எதிர்க்கும் சில அதிமுக நிர்வாகிகள், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகளான தீபா தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் தினமும் தீபாவின் வீட்டிற்கு அவரை பார்ப்பதற்காக வருகின்றனர். அவர்களிடம் தீபா, அரசியலில் ஈடுபடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறியிருந்தார்.

இதற்கிடையில் சேலம், திருச்சி, கரூர், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தீபா பேரவை ஆரம்பித்து, உறுப்பினர் சேர்க்கையையும், அதிமுகவினர் துவங்கினர்.

சேலத்தில், எம்ஜிஆர், ஜெயலலிதா அதிமுக என்ற பெயரில் புதிய இயக்கத்தையும் ஆரம்பித்து கொடி, சின்னம் ஆகியவற்றையும் அறிவித்து விட்டனர். இந்த இயக்கம் தீபா தலைமை தாங்கி நடத்துவதற்காக துவங்கப்பட்ட இயக்கம் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஜெயலலிதா தீபா பேரவை தொடங்கி இதற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பேரவையில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டும் வருகிறது. இந்த விண்ணப்பங்களை சிலர் விலைக்கு விற்பதாக வெளியான தகவல்களை நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கூறியுள்ள மாநில ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், ”அடுத்த மாதம் 24ஆம் தேதி தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று ஒரு கோடி தொண்டர்களை இணைத்து தீபா அவர்களிடம் உறுப்பினர் விண்ணப்பங்களை கொடுக்க இருக்கிறோம்.

இதற்காக விண்ணப்பங்கள் வழங்கி வருகிறோம். ஆனால் இந்த விண்ணப்பங்களை சிலர் ரூ.100 முதல் ரூ.500 வரை விற்பதாக தகவல்கள் வந்துள்ளது. இவர்களிடம் விண்ணப்பங்களை வாங்கி பொதுமக்களும், தொண்டர்களும் ஏமாற வேண்டாம்.

உறுப்பினர் விண்ணப்பங்களை யாரும் விற்பனை செய்தால் உடனே எங்களுக்கு தெரிவிக்கவும் கேட்டு கொண்டிருக்கிறோம். விண்ணப்ப படிவத்தை விற்பனை செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் இருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.