செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (21:05 IST)

கனமழையால் பாதிக்கப்பட்ட 32 இடங்களில் 11 நகரும் பண்ணை பசுமை கடைகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 32 இடங்களில் கூடுதலாக 11 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


 
 
 
நவம்பர் மாதம் பெய்த மழையின் காரணமாக காய்கறிகள் வரத்து குறைந்து, விலை உயர்ந்ததால், குறைந்த விலையில் தரமான காய்கறிகளைப் பொதுமக்கள் பெற சென்னை நகரில் கூடுதலாக 50 காய்கறி விற்பனை மையங்களை, தற்காலிகமாக திறக்க முதலமைச்சர் கடந்த மாதம் 17ஆம் தேதி ஆணையிட்டார்.
 
 
தற்போது கூடுதலாக தொடங்கப்பட்ட 50 தற்காலிக பண்ணை பசுமை கடைகள் மூலம் 18 நாட்களில், 62.33 டன் தரமான காய்கறிகள் குறைந்த விலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இக்கடைகள் ஆரம்பித்த சில நாட்களில் வெளிச்சந்தையில் காய்கறிகள் விலை குறையத் தொடங்கியது. இந்த தற்காலிக பண்ணை பசுமை கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
 
இந்நிலையில், இந்த வாரத்தில் பெய்த கடும் மழையால் சென்னைக்கு காய்கறிகள் வரத்து குறைந்தமையால், காய்கறிகளின் விற்பனையை சீர்படுத்தும் வகையிலும், நுகர்வோருக்கு உரிய நேரத்தில் தரமான காய்கறிகள், நியாயமான விலையில், அவர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் கிடைக்கும் வகையிலும், கூடுதலாக 11 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் கீழ்க்கண்ட 32 இடங்களில் விற்பனை செய்ய உள்ளன.
 
 
காரணீஸ்வரர் கோவில் தெரு (சைதாப்பேட்டை), ஜி. என். செட்டி தெரு (தியாகராய நகர்), காம்தார் நகர், (நுங்கம்பாக்கம்), ராகவேந்திரா கல்யாண மண்டபம், (கோடம்பாக்கம்), நுங்கம்பாக்கம் ரெயில்வே ஸ்டேஷன், ரட்லேண்ட்கேட், எல்லையம்மன் கோவில் தெரு, (தேனாம்பேட்டை), மயிலாப்பூர் குளம், பெசன்ட்நகர், சிந்தாதிரிப்பேட்டை, நேஷனல் பப்ளிக் ஸ்கூல் (கோபாலபுரம்),

ராயப்பேட்டை, சாந்தி காலனி, (அண்ணாநகர்), போக்குவரத்து அலுவலகம் அருகில் (அண்ணாநகர்), வசந்தம் காலனி (அண்ணாநகர்), எம்.எம்.டி.ஏ. காலனி அரும்பாக்கம், சேணியம்மன் கோவில் தெரு, (தண்டையார்பேட்டை), திருவொற்றியூர் பேருந்து நிலையம், பார்த்தசாரதி பாலம் (தங்கசாலை), மண்ணப்பன் தெரு, (பழைய வண்ணாரப்பேட்டை),

சிங்கந்தர்பாளையம், (கொருக்குப்பேட்டை), வியாசர்பாடி, முத்தமிழ் நகர், (வண்ணாரப்பேட்டை), காசிமேடு, குறுக்கு தெரு, (புது வண்ணாரப்பேட்டை), வீரராகவன் தெரு, (புது வண்ணாரப்பேட்டை), பாலவாக்கம், மடிப்பாக்கம், மேடவாக்கம், உத்தண்டி, சோழிங்கநல்லூர் மற்றும் ஆதம்பாக்கம் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.