வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 24 மார்ச் 2017 (11:04 IST)

எனக்கு வேலை செய்யுங்கள் எடப்பாடி: முதல்வரை கேவலப்படுத்தும் தினகரன்!

எனக்கு வேலை செய்யுங்கள் எடப்பாடி: முதல்வரை கேவலப்படுத்தும் தினகரன்!

ஆர்கே நகர் தொகுதியில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இதற்காக தேர்தல் பணி செய்ய 152 பேரை நியமித்துள்ளார் தினகரன். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தினகரன் மதிக்காமல் செயல்படுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. சாதாரண கட்சி நிகழ்ச்சிக்கும் முதல்வரை வர வைத்து அவரை மட்டம் செய்வதாக கூறப்படுகிறது.
 
ஆர்கே நகர் தொகுதியில் தினகரன் போட்டியிடப்போவது குறித்து எடப்பாடி பழனிச்சாமியிடம் கருத்து கேட்டபோது தற்போது உள்ள சூழலில் நீங்கள் போட்டியிட வேண்டாம் என அவர் கூறியதாகவும், அதற்கு தினகரன், வெற்றி பெற்றால் உங்களுக்கு போட்டியாக வந்துவிடுவேன் என்ற பயமா என ஓப்பனாக கேட்டதாக தகவல்கள் வந்தன.
 
மேலும் நேற்று முன்தினம் ஆர்.கே.நகர் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் பெயரை எல்லாம் கூறிய தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை கூற வில்லை. பின்னர் நிர்வாகிகள் சுட்டிக்காட்டிய பிறகு வேறு வழியில்லாமல் அவரது பெயரை கூறினார்.
 
இந்நிலையில் தினகரனுக்காக வேலை செய்ய தேர்தல் பணிக்குழு அறிவிக்கப்பட்டது. அதில் அனைத்து அமைச்சர்களும் இடம் பெற்றனர். முதல்வர் பழனிச்சாமியின் பெயரும் அதில் இடம்பெற்றது அதிமுக நிர்வாகிகளை அதிர்ச்சியடைய வைத்தது. மாநிலத்தின் முதல்வராக இருப்பவர் அரசு நிர்வாகத்தை பார்க்காமல் மற்றவர்களை போல தினகரனுக்காக தேர்தல் வேலை செய்வாரா என அதிமுக வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.