வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 30 மார்ச் 2017 (09:29 IST)

ஜெ.வின் மரணத்தில் ஒ.பி.எஸ் கபட நாடகம் - தீபா விளாசல்

ஜெ.வின் மர்ம மரணத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் கபட நாடகம் ஆடுவதாக ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.


 

 
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களான தினகரன், மதுசூதனன், தீபா ஆகியோர் அந்த பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
சமீபத்தில் அங்கு பேசிய மு.க.ஸ்டாலின் ஜெ.வின் மரணத்தில் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ் ஆகிய இருவரையும் குற்றம் சாட்டினார். அதற்கு ஓ.பி.எஸ்-ஸும் நேற்று பதிலளித்தார். ஜெ.விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தன்னிடம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும், அவரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்ல எவ்வளவோ முயற்சி செய்தும், சசிகலா தரப்பு அதை நிராகரித்து விட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
 
இந்நிலையில், படகு சின்னத்தில் போட்டியிடும் தீபா, ஜெ.வின் மரணத்தில் ஓ.பி.எஸ் மீது புகார் கூறியுள்ளார்.  ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள தீபா, நேற்று தண்டையார் பேட்டையில் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை தேர்தல் பனிமனையை திறந்து வைத்து பேசினார். 
 
அவர் கூறும் போது, டிடிவி தினகரனும், மதுசூதனனும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் எனவும், ஜெயலலிதா மரணத்தில் ஓ.பி.எஸ் கபட நாடகம் ஆடுவதாகவும் கருத்து தெரிவித்தார். அவரின் கருத்து ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
சில நாட்களுக்கு முன்பு ஓ.பி.எஸ்-ஸோடு இணைந்து செயல்படுவதாக திபா அறிவித்தார். அதன்பின் மௌனம் காட்டினார். தனித்து செயல்பட போவதாக அறிவித்தார். முக்கியமாக, ஜெ.வின் மரணத்தில் தனக்கு எந்த சந்தேகமும் இல்லை என பத்திரிக்கையாளர்களிடம் தொடர்ந்து கூறி வந்தார்.
 
இந்நிலையில், ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஓ.பி.எஸ் கபட நாடகமாடுவதாகவும் அவர் கூறியிருப்பது, தொகுதி மக்களின் வாக்குகளை பெருவதற்காக மட்டுமே என ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.