வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (11:56 IST)

தனபால் முதல்வரா?: எடப்பாடி பழனிச்சாமி; ஓபிஎஸ்; அமைச்சர்கள் தீவிர ஆலோசனை!

தனபால் முதல்வரா?: எடப்பாடி பழனிச்சாமி; ஓபிஎஸ்; அமைச்சர்கள் தீவிர ஆலோசனை!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


 
 
ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இணைந்ததையடுத்து ஓபிஎஸ்-க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது. மேலும் தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சசிகலாவை பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவோம் எனவும் கூறினர்.
 
இதனையடுத்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் போர்க்கொடி தூக்கினர். அவர்கள் ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் அவர் மீது நம்பிக்கையை இழந்துவிட்டோம் என தங்கள் ஆதரவை வாபஸ் வாங்குவதாக கடிதம் அளித்தனர். இதனையடுத்து தினகரன் தனது ஆதரவு எம்எல்ஏக்களை புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைத்துள்ளார்.
 
மேலும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை இல்லை எனவே அவர் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசாபையை கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
அதே நேரத்தில் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் 37 எம்எல்ஏக்கள் இருப்பதாக சசிகலாவின் தம்பி திவாகரன் கூறி வருகிறார். மேலும் அவர் கூறுகையில் தற்போது சபாநாயகராக இருக்கும் தனபால் முதல்வராக வரவேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இதனால் தனபாலும் தினகரன் அணியில் தான் இருக்கிறாரோ என்ற ஐயம் நிலவி வருகிறது.
 
சபாநாயகர் தனபால் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர், அதிமுகவில் 30-க்கும் மேற்பட்ட தலித் சமுதாயத்தை சேர்ந்த எம்எல்ஏக்கள் உள்ளதால் தனபாலை முதல்வராக முன்னிறுத்துவது எடப்பாடி பழனிச்சாமிக்கு நிச்சயம் நெருக்கடியை கொடுக்கும் என திவாகரன் திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
இந்த சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் சபாநாயகர் தனபாலுடன் தலைமைச்செயலகத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனையடுத்து தற்போது முதல்வரும், சபாநாயகரும் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த ஆலோசனையில் சட்டசபையை கூட்டுவது, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது, தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் சபாநாயகர் தனபால் இருந்தால் அவரை சமாதானம் செய்வது குறித்தும், திவாகரன் தனபாலை முதல்வராக்குவது குறித்து பேசியது தொடர்பாகவும் பேசியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.