வெள்ளி, 29 மார்ச் 2024
  1. கரு‌த்து‌க் கள‌ம்
  2. எழுத்தாளர்கள்
  3. எம். முருகன்
Written By எம். முருகன்
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:10 IST)

பன்னீரா? எடப்பாடி பழனிச்சாமியா? ஆட்சி கலைப்பா? - என்ன நடக்கப் போகிறது?

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை மக்கள் பீதியுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


 

 
சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கிய பின் தமிழக அரசியலில் எல்லாம் மாறிப்போனது.. ஜெயலலிதாவிற்கு பின் பிளவே ஏற்படாத அதிமுகவில் தற்போது பிளவு ஏற்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிகாத்த அதிமுகவில் ஓ.பி.எஸ், சசிகலா என்ற இரண்டு அதிகார மையங்கள் தோன்றியது. கடந்த ஒரு வார காலமாக அவர்கள் இருவரும் தமிழக மக்களை பரபரப்பாக வைத்திருந்தனர். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பிற்கு பின், சசிகலா விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. 3 மாதங்களில் அவரின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது..
 

 
தற்போது அதிமுக சார்பில் மணல் கொள்ளை புகழ் எடப்பாடி பழனிச்சாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். செங்கோட்டையன பல எம்.எல்.ஏக்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லாததால் பழனிச்சாமியை சசிகலா தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிகிறது. அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணியளவில் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து, ஆட்சி அமைக்க தன்னை அழைக்குமாறு ஆளுநருக்கு கோரிக்கை வைப்பார்.
 

 
மறுபக்கம் ஓ.பி.எஸ், தனி ஒருவனாக போராடுவேன் என அவர் கூறினாலும், பெரும்பாலான அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் வருவார்கள் என்பதே அவரின் நம்பிக்கை. தற்போது 11 எம்.பி, ஒரு  அமைச்சர் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் வசம். கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏக்களை சுதந்தரமாக முடிவெடுக்கவிட்டால் அவர்கள் தன்னையே ஆதரிப்பார்கள் என ஓ.பி.எஸ் நம்புகிறார். அதனால்தான் இன்று அவர் கூவத்தூருக்கு செல்வதாக முடிவெடுத்தார். உடனேயே, கூவத்தூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஓ.பி.எஸ்-ஸின் ஆதரவாளர் மாஃபா பாண்டியராஜன் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
 
டெல்டா மாவட்டம் மற்றும் கொங்கு மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கம் வரமாட்டார்கள்.. ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏக்கள் வேண்டும். நாம் வரவில்லை என்றாலும், ஓ.பி.எஸ் மீண்டும் வரக்கூடாது என சசிகலா தரப்பு திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறது. அதேபோல், ஓ.பி.எஸ்-ற்கு ஆதரவு தெரிவிக்கும் மனநிலையில் திமுகவும் இல்லை. ஆட்சி கலைப்பு ஏற்பட்டு தேர்தல் நடைபெற்றால் திமுக வெற்றி பெரும் என மு.க. ஸ்டாலின் உறுதியாக நம்புகிறார். 


 

 
எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பாரா? ஓ.பி.எஸ் தொடர்வாரா? என்பது விரைவில் தெரிந்துவிடும்.  யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் போனால் ஆட்சி கலைப்பிற்கும் ஆளுநர் உத்தரவிட வாய்ப்புண்டு...
 
எனவே, மனசாட்சி படி செயல்படுங்கள்.. அம்மாவின் ஆட்சியை மீண்டும் தொடர்வோம் என எம்.எல்.ஏ.க்களுக்கு கோரிக்கை வைத்து வருகிறார் ஓ.பி.எஸ். கொங்கு மண்டலத்திலிருந்து 2 எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கம் வந்துவிட்டனர். டெல்டா மாவட்டங்களிலிருந்தும் சிலர் வந்துவிட்டால், பல எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் வந்து விடுவார்கள் என ஓ.பி.எஸ் உறுதியாக நம்பிக் கொண்டிருக்கிறார். 
 
ஆளுநர் மற்றும் எம்.எல்.ஏக்களின் முடிவிலும் இருக்கிறது தமிழக அரசியலின் எதிர்காலம்....