வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2016 (14:49 IST)

அச்சம் என்பது மடமையடா - திரைவிமர்சனம்

சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வந்த 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒருவழியாக இன்று வெளியானது. 


 
 
'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்கு பிறகு சிம்புவுடன் கூட்டணி அமைத்துள்ள கவுதம் மேனன். மலையாள நடிகை மஞ்சிமா மோகன் நாயகியாக, ஏ.ஆர். ரஹ்மான் இசையில், டேன் மெக்கார்தர் ஒளிப்பதிவில் இப்படம் வெளி வந்துள்ளது.
 
ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள 'அச்சம் என்பது மடைமையடா', தொலை தூர சாலை பயணத்தில் சந்திக்கும் சிக்கல், திகில் சம்பவங்களை உள்ளடக்கி உருவாகியுள்ள படமாகும். 
 
படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வருகிறார் சிம்பு. விஸ்காம் படித்து முடித்த தங்கையின் தோழி நாயகி மஞ்சிமா மோகன் புராஜெக்ட் விஷயமாக சிம்புவின் வீட்டில் தங்கக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. வழக்கம் போல் சிம்புவிற்கு கண்டதும் காதல்.
 
இதனால், மஞ்சிமாவுடன் நெருங்கி பழகி நட்பாகிறார். அப்போது, சிம்பு ஏன் வேலைக்கு போகவில்லை என்பதற்கு, பைக்கில் நீண்ட தூரம் பயணம் செய்யவேண்டும் என்ற தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறிய பிறகுதான் வேலைக்கு செல்லப்போவதாக சிம்பு மஞ்சிமாவிடம் கூறுகிறார். மஞ்சிமாவுக்கும் சிம்புவைப் போன்றே நீண்ட தூரம் பைக்கில் செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது.
 
இந்நிலையில், மஞ்சிமா மோகன் தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் ஒரே விதமான ஆசை கொண்ட இருவரும் பைக்கில் மகாராஷ்டிரா நோக்கி பயணமாகிறார்கள். 
 
ஆனால், மகாராஷ்டிரா நெருங்கும் சமயத்தில் எதிர்பாராத விதமாக இவர்களது பைக் விபத்துக்குள்ளாகிறது. அடிபட்டு கிடக்கும் சமயத்தில் தான் இறந்துவிடுவோமோ என்ற பயத்தில் சிம்பு தனது காதலை மஞ்சிமாவிடம் சொல்கிறார்.  
 
பின்னர், சிம்பு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கண்விழித்து பார்க்கும்போது மஞ்சிமா மோகனை காணவில்லை. அப்போது அவருக்கு வ்ரும் ஒரு போனில் மஞ்சிமா மோகன் அங்கிருந்து சென்றதற்கான காரணமும் அவளுக்கு ஏற்பட்டிருக்கிற பிரச்சினை குறித்து தெரிய வருகிறது. 
 
அதன்பிறகு சிம்பு, மஞ்சிமா மோகனை தேடிக் கண்டுபிடித்தாரா, அவளது பிரச்சினைக்கு தீர்வு கண்டாரா? என்பது படத்தின் ஆக்‌ஷன் நிரைந்த மீதிக்கதை. 
 
படத்தின் மிகப்பெரிய பலமே சிம்பு தான். அவர் பேசும் வசனங்கள், முகபாவனைகள் எல்லாமே ரொம்பவும் அழகாக இருக்கிறது. இந்த கதையில் சிம்புவை தவிர வேறு யாரையும் வைத்துப் பார்க்கமுடியவில்லை. 
 
மஞ்சிமா மோகன் ஆரம்பத்தில் சிம்புவுடன் நெருங்கி பழகும் காட்சிகளிலும், பிற்பாதியில் குடும்ப செண்டிமெண்டில் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் மஞ்சிமா மோகனை ரொம்பவும் அழகாகவே காட்டியிருக்கிறார் கவுதம் மேனன்.
 
டேனியல் பாலாஜியின் கதாபாத்திரத்திற்கு வலுவில்லாதது மிகப்பெரிய ஏமாற்றம். அதேபோல், போலீசாக வரும் பாபா சேகரை பெரிய வில்லனாக பார்க்கமுடியவில்லை. சிம்புவின் நண்பனாக வரும் டான்ஸர் சதீஷ் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். 
 
படத்தின் இறுதிவரை சிம்புவின் பெயரையே சொல்லாமல் சுவாரஸ்யமாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர். கிளைமாக்ஸ் காட்சி சிம்பு ரசிகர்களை திருப்திபடுத்தும் என்றாலும், சாதாரண மக்களுக்கு ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. 
 
ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் எல்லாம் ஏற்கெனவே ஹிட்.ஆனால், படத்தில் விஷுவலாக பார்க்கும்போதும் நன்றாக இருக்கிறது. 10 நிமிட இடைவெளிக்கு ஒரு பாடல் வந்தாலும், ரசிக்கும்படியாகவே இருக்கிறது. 
 
‘சோக்காலி’ பாடலை திரையில் பார்ப்பவர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் இயக்குனர். பெரிதும் எதிர்பார்த்த ‘தள்ளிப்போகாதே’ பாடல் எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை. டானின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது.
 
வெகு நாட்களாக வெளியாகத்தால், படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது. 
 
மொத்தத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ சூப்பர் டிரைவ்.