வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Sasikala

நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய பலன்கள்

நீரில் கரையக்கூடிய, திரவங்களில் கரையும் நார்ச்சத்து, கரைந்தவுடன், ‘ஜெல்’ போல் ஆகிவிடும். இந்த கரையும் நார்ச்சத்து பெரும்பாலும், பெக்டின் உள்ளவை. ஓட்ஸ் உமி, ஓட்ஸ், பீன்ஸ், வேர்க்கடலை, அரிசி உமி, பார்லி, சாத்துக்குடி, ஆரஞ்ச் போன்ற  ‘சிட்ரஸ்’ பழங்கள், ஆப்பிள் கோது, தானியம், பருப்பு இவை கரையும் நார்ச்சத்து உள்ளவை. கரையும் நார்ச்சத்து  கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.

 
கரையாத நார்ச்சத்த, செல்லுலோஸ், ஹெமி செல்லுலோஸ், லிக்னின் உள்ளவை. இவை பல தானியங்களில், பழங்கள், காய்கறிகள் (ஆப்பிள்தோல், முட்டைகோஸ், பீட்ரூட், காலிஃப்ளவர், கேரட் போன்றவை) இவற்றில் உள்ளவை. கரையாத  நார்ச்சத்து ஜீரணத்திற்கு உதவும். மலச்சிக்கலை போக்கும்.
 
உணவில் நார்ச்சத்து சேர்த்துக் கொள்வதால், நுரையீரல், பிராஸ்டேட், கணைய புற்றுநோய்கள் தடுக்கப்படுகின்றன. அதுவும்  சைவ உணவு உண்பவர்களுக்கு நார்ச்சத்து அதிகம் கிடைக்கிறது.
 
கரையும் நார்ச்சத்து கொழுப்பு, அதுவும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கொலஸ்ட்ராலை உடல் கிரகிப்பதை  குறைக்கிறது. பித்த உப்பு, கொழுப்பு அமிலங்களை “ஸ்பான்ஜ்” போல் உறிஞ்சி, மலமாக வெளியேறுகிறது. இதனால் இதயம்  பாதுகாக்கப்படும் தவிர உயர் ரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கிறது. இன்சுலீன் அளவுகளை அதிகமாக்குகிறது. நீரிழிவு  நோயாளிகளில், சர்க்கரை செரிமானத்தை மந்தப்படுத்துவதால், அதிக அளவு, திடீரென்று ஏறும் குளுக்கோஸ் அளவை  கட்டுப்படுத்துகிறது. இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது தானே.
 
கரையாத நார்ச்சத்து நீரை உறிஞ்சி மலத்திற்கு அடர்த்தியையும், திடத்தன்மையை கொடுக்கிறது. மலம் மிருதுவாகிறது.  சுலபமாக வெளியேறுகிறது. இதனால் மலச்சிக்கல் மறைகிறது. மலச்சிக்கல் இல்லாவிடில் வயிறு, குடல்களின் அழற்சிகள்  தடுக்கப்படுகின்றன. மூலம், குடல்களில் உண்டாகும் புற்றுநோய்கள் தடுக்கப்படுகின்றன.
 
நார்ச்சத்து மிகுந்த உணவுகள் அடிவயிற்று சங்கடம் மற்றும் எரிச்சலூட்டும் வயிற்று சங்கடம், டைவர்டிகுலா (ஜீரணமண்டல பாகங்களில் அழற்சி), போன்ற வயிற்றுக் கோளாறுகளை குணமாக்குகின்றன.
 
கரையாத நார்ச்சத்தினால் வயிறு நிரம்பிய உணர்வை, திருப்தியை உண்டாக்குகிறது. அதிக நேரம் வயிற்றில் தங்குகிறது. பசியை தூண்டும் இன்சுலீனை கட்டுப்படுத்துகிறது. இந்த செயல்பாடுகளால் பசி எடுப்பதில்லை. இது உடல் எடையை அதிகமாக்காமல்  பாதுகாப்பதால், குண்டானவர்களுக்கு எடை குறைய உதவுகிறது.