வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2016 (13:06 IST)

பிரதமரே சாப்பிடாமல் தான் இருக்கிறாராம்.... நாம் சாப்பிடலாமா?

கடந்த 8ஆம் தேதி நள்ளிரவு முதல் பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததால், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதோடு, 70க்கும் மேற்பட்ட உயிரழிப்புகள் ஏற்பட்டன. மேலும், இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.


 

இந்நிலையில், நேற்று முன்தினம் வானொலியில் பிரதமர் ஆற்றிய உரையில், ”சிறிய வணிகம் செய்பவர்கள் டிஜிட்டல் உலகத்திற்குள் நுழைய வேண்டும். மொபைல் போன் மூலமாக வங்கிகளின் விண்ணப்பங்களை இறக்கி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் வணிகம் செய்ய வேண்டும்.

மிகப் பெரிய மால்களில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை போல சிறு பெட்டிக்கடைகளும் கூட இந்த தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டும். ரொக்கப் பணத்தை கையாளாமல் வியாபாரம் செய்து பழக வேண்டும். இதனால் சிறப்பான வாழ்க்கை அமையும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து குறிஞ்சி நாதன் தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அது கீழ்கண்டவாறு:

 இன்று எனக்கு விடுப்பு என்பதால் இன்று ஒருநாள் Cashless transaction ஐ (பணமில்லா பரிமாற்றம்) முயன்று பார்க்கலாம் என முடிவு செய்தேன்.தெருவில் அறுபது வயது மதிக்கத்தக்க பெண்மணிகாலையிலேயே கீரைக்கட்டுகளை சுமந்து வந்த குரல்கேட்டதும் கீரை வாங்கலாம் என முடிவெடுத்தேன். கூப்பிட்டு விலை கேட்டதும் ஒரு கட்டு பத்து ரூபாய் என்றார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரிடம் Card swiping machine (கிரடிட் கார்டு மூலம் பணத்தை தனது கணக்கில் வரவு வைத்துக் கொள்ளும் இயந்திரம்) இல்லை. Pay tm வசதியை கூடவே வைத்திருக்கவேண்டும் என்ற பொருளாதார அறிவு இல்லை. எனவே அவரை அனுப்பிவிட்டேன்.

அதே கீரை பக்கத்து தெருவில் உள்ள Reliance fresh (ரிலையன்ஸ் பிரெஷ்) கடையில் உள்ளது. பாட்டி கொண்டு வந்த அளவுக்கு Fresh ஆக (புத்தம் புதிதாக) இல்லாவிடிலும் ஓரளவுக்கு சுமாராகவே இருந்தது. ஒரு கட்டு 20 ரூபாய் என்றனர். அவர்களிடம் Card payment (கிரடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி) வசதி இருந்தது.

ஆனால் 20 ரூபாய்க்கு Card தேய்க்கமாட்டோம். குறைந்தது 200 ரூபாய்க்கு வாங்கினால் தான் Card வாங்குவோம் என்றனர். இது என்னடா சோதனை என்று அங்கிருந்து திரும்பினேன். வரும் வழியில் டீ குடிக்கலாம் என்றால், டீக்கடைக்காரரிடமும் Card வசதி இல்லை.

மணி 9 ஆனதும் ஒரு பெண்மணி நடத்தும் இட்லி கடைக்கு சென்றேன். ஐந்து இட்லி ஒரு வடை 30 ரூபாய் என்றார்.

ஆனால் அவரிடமும் Card வசதி இல்லை. Doveton Cafe என்றொரு பெரிய ஓட்டல் உள்ளது. அவர்களிடம் சென்றால் நீங்கள் குறைந்தது 150 ரூபாய்க்கு சாப்பிட்டால் தான் Card வாங்குவோம் என்றனர்.

சரி தோசை மாவு வாங்கி வீட்டுக்கு போய் தோசை சுடலாம் என்று அந்த கடைக்கு போனால் மாவு பாக்கெட் 15 ரூபாய் தான். ஆனால் அவரிடம் Card வசதி இல்லை.

ஒரு மணி நேரமாக வெயிலில் நடந்து சென்றது களைப்பாக இருந்ததால் ஒரு பெட்டி கடையில் பன்னீர் சோடா குடிக்கலாம் என்று போனால் அவரிடமும் Card வசதி இல்லை.

மிகுந்த பசி தான். இருந்தாலும் எல்லையில் ராணுவ வீரர்கள் கஷ்டப்படும்போது ஒரு நாள் சாப்பிடாவிட்டால் என்ன, அதுவுமில்லாமல் பிரதமரே சாப்பிடாமல் தான் இருக்கிறாராம். நாம் சாப்பிடலாமா என்று மனதில் நினைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் என் மகள் பிஸ்கெட் வேண்டுமென கேட்டாள். அவளை கடைக்கு கூட்டிப்போய் என்னிட முள்ள 50 ரூபாய்த் தாளை கொடுத்து என் Cashless சங்கல்பத்தை முடித்துக்கொண்டேன்..!

முழுதாக மூன்று மணி நேரம் கூட என்னால் என் விரதத்தை காப்பாற்ற முடியவில்லை. எனது சங்கல்பம் முக்கியமானது தான். ஆனால் எல்லாவற்றையும் விட என் குழந்தை எனக்கு முக்கியமானவள்..!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.