வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Murugan
Last Modified: வியாழன், 13 ஜூலை 2017 (19:54 IST)

செளதியில் குடியிருப்பு பகுதியில் தீ: 10 இந்தியர்கள் உட்பட 11 தொழிலாளர்கள் பலி

செளதி அரேபியாவின் தென்மேற்கு நகரமான நஜ்ரானில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று சிவில் பாதுகாப்பு இயக்குனரகம் தெரிவித்திருக்கிறது.


 

 
இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அவர், தொழிலாளர்களின் குடியிருப்பு வசதி பற்றிய கவலைகளை வெளியிட்டுள்ளதாக செளதி செய்தி முகமை கூறுகிறது.
 
செளதி அரேபியாவில் ஒன்பது மில்லியன் வெளிநாட்டினர் வேலை செய்வதாக கூறப்படுகிறது. அதில் பெரும்பான்மையானவர்கள் தெற்காசியாவை சேர்ந்தவர்கள்.
 
வெளிநாட்டு தொழிலாளர்கள் மோசமான சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் கூறும் மனித உரிமைகள் அமைப்பினர், பணியமர்த்தியவர்களின் அனுமதியில்லாமல் தொழிலாளர்கள் பணியை மாற்றுவதோ அல்லது நாட்டில் இருந்து வெளியேற முடியாத சூழ்நிலயோ நிலவுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
 
"தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படைவீரர்கள் ஈடுபட்டிருந்த போதிலும், மிகப் பழமையான அந்த வீட்டில் ஜன்னல்களோ, காற்று உள்ளே வருவதற்கான வசதிகளோ செய்யப்படாததால், புகையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர், வேறு 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று சிவில் பாதுகாப்பு இயக்குனரகம் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
இதனிடையே, இந்த விபத்தில் 10 இந்தியர்கள் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், விபத்து நடந்த பகுதிக்கு இந்திய தூதரக அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.