வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala

தை அமாவாசையில் பித்ருகளுக்கு தர்ப்பணம் செய்ய சிறந்தது என கருத காரணம் என்ன?

தை அமாவாசை இந்து சமயத்தவர்களால் பின்பற்றக்கூடியதும்,  சிறப்பான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை  தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. அமாவாசை தினத்தில் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர்.
 

இதை அமாவாசை விரதம் என்பர். அதில் ஆடி அமாவாசை  மற்றும் தை அமாவாசை முக்கிய இடம் உண்டு. தை அமாவாசை அன்று ஆண்டின் பிற (மாத) அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்பு  பூஜை (திதி) செய்வர்.
 
இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள மாதம் உத்தராயண காலம்  என்றும், ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்றும் அழைப்பர். 
 
உத்தராயண காலம் ஆரம்ப மாதமாக தை மாதம் வருவதால் தை அமாவாசையும், தட்சணா கால ஆரம்ப மாதமாக ஆடி மாதம்  வருவதால் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை ஆடி அமாவாசை எனவும் அன்றைய தினம் தர்ப்பணம், திதி பிதுர் வழிபாட்டிற்கு  புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
 
இறந்த நம் முன்னோர்களுக்குச் சிரத்தையுடன் செய்யும் காரியமே சிராத்தம். சாதத்தைப் பிடித்து ஆறு பிண்டங்கள் வைத்து, எள்,  ஜலம், தர்ப்பை கொண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும். தந்தை, தாத்தா, முப்பாட்டன்கள், தாய், பாட்டி, கொள்ளுப் பாட்டி  ஆகிய கோத்திர தாயாதிகளுக்கு ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மிக முக்கிய கடமையாகும் இது. இந்த ஆறு  பிண்டங்களையும் ஒன்றாக இணைத்து காகத்துக்கு வைக்கும்போது, அது உண்ணுவதன் மூலம் நம் முன்னோர்களுக்கு அந்த  ஆகாரம் செல்வதாக ஐதீகம்! 
 
பூலோகம் வந்த முன்னோர்கள் மீண்டும் பிதுர்லோகம் செல்லும் தை அமாவாசை நாளில் புனித நீராடி, அவர்களுக்கு எள்ளும்  நீரும் அளித்தால் எண்ணற்ற பலன்களும், தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் என்கின்றன புராணங்கள். பூமியில் பிறந்தவர்கள் பாவ புண்ணியத்திலிருந்து தப்பமுடியாது. பாவங்களில் மகா பாவமாக கூறப்படுவது பித்ரு கர்மாவை நிறை வேற்றாமல்  இருப்பதுதான். உயிருடன் இருக்கும் பெரியவர்களை மதிக்காமல், பலர் உள்ளனர். அந்த உயிர்கள் படும் துன்பம், பாவங்கள்  ரூபத்தில் கவனிக்க தவறியவர்களையே வந்து சேரும். நாம் எங்கு சென்றாலும் உடன் வருவது பாவபுண்ணியங்கள் மட்டுமே.  பித்ரு பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்ய ஏற்படுத்தப்பட்டது நம் முன்னோர்களுக்கு மறக்காமல் காரியம்  நிறைவேற்றவேண்டும்.
 
அமாவாசை நாளில் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. தர்ப்பணம் செய்த பிறகு காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில்  வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பர் என்பதும் ஐதீகம். கிட்டத்தட்ட, நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.